சனி, மார்ச் 17, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 22.




நில்லுடா என்றதும் ஓங்கிய கத்தியை தூக்கி பிடித்தபடி நின்றான். பாத்தியா இதான் நட்பு. வெட்டுடான்னதும் என்ன ஏதூன்னு கேட்காம ஓடிவந்தான் பாத்தியா. 

அது ஏன் அவன்கிட்டயில்ல. நான் எதுவாயிருந்தாலும் அவன்கிட்ட சொல்லிடுவன். அவன் சில விஷயத்த சொல்றதில்ல. அத நான் பெருசா எடுத்துக்கல. ஆனா எவ்ளோ பெரிய விஷயத்த மறைச்சியிருக்கான். இவன் விஷயத்த இன்னோருத்தர் சொல்லி தெரிஞ்சிக்கற அளவுக்கு இருக்கு. 

என்னதாண்டா பண்ணான். 

அவனையே கேட்க வேண்டியதானே என்றதும் எல்லோரும் அவன் பக்கம் பார்வையை திருப்பினார்கள். 

நானும் தேவியும் ஒரு வருஷமா லவ் பண்றோம். அத அவன்கிட்டயிருந்து மறைச்சிட்டோம். ஒருநாள் நானும் தேவியும் வெளியில போய்ட்டு வந்தோம். அத ப்ரியா அவன்கிட்ட சொல்லிடுச்சி. அதான் பிரச்சனை. 

டேய் இதெல்லாம் அநியாயமாயில்ல. ஒரு வருஷமா லவ் பண்றத மறைச்சியிருக்கிங்க அப்ப கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க. 

என்ன இதல இழுத்துவிடாதிங்க. நான் அப்பவே சொல்லிடுன்னு சொன்னன். இவன் தான் கேட்கல என தேவி ஜகா வாங்கினாள். 

நான் என் பர்த்டேக்கு சொல்லலாம்னு நினைச்சியிருந்தன் என ஜான் சொல்ல. 

எத கல்யாணம் நடந்துடுச்சிங்கறதயா என கடுப்புடன் கேட்டதும் சைலண்டானான். 

நான் இனிமே அவனோட பேசறமாதிரியில்ல என்றபடியே பம்ப்செட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். 

என்னாச்சி ஜான் என ஜீவா கேட்க நடந்ததை சொன்ன ஜான் தப்பு பண்ணிட்டன். மன்னிச்சிடுடாங்கறன் கேட்கமாட்டேன்கிறான். நீயாவது அவன்கிட்ட சொல்லு ஜீவா. 

அவனைப்பத்தி தான் தெரியுமே அப்பறம் எதுக்கு மறைச்ச?. சரி விடு பாத்துக்கலாம். 

அதிருக்கட்டும் அவன் வெட்டுடான்னதும் வெட்ட வந்தியே நியாயமா?.

நான் சைலண்டா நின்னா கோபப்படுவான். அதனால தான்……… அவன் ஊருக்கு வந்தப்பவே உன்னால பிரச்சனைன்னு சொன்னான். என்ன பிரச்சனைன்னு சொல்லல. உனக்கும் அவனுக்கும் பெரிய பிரச்சனையா இருந்த வீட்டுக்குள்ள சேத்துயிருக்கமாட்டான். அதனால பெருசா ஒன்னும்மில்லன்னு தெரிஞ்சிக்கட்டன். அதோட வெட்டுடான்னு சொல்லிட்டு பாத்துக்கிட்டு இருக்கமாட்டான். எப்படியும் நிறுத்த சொல்லுவான்னு தெரியும். 

நீ ஓடிவந்ததும் பயந்தே போயிட்டன் தெரியுமா?. 

அவன் அப்படித்தான். கோபத்தல என்ன பேசறோம், சொல்றோம்னு தெரியாம பேசிடுவான். விடு பாத்துக்கலாம் எப்படியும் உங்கிட்ட பேச 3 மாசமாகும். அதனால அவன் போக்குலயே போ. வீணா பிடிவாதம் பண்ணா அதிகமா கோபமாகிடுவான் சொல்றத சொல்லிட்டன் அப்பறம் உன் இஸ்டம். 

ப்ரியாவை பக்கம் திரும்பி எல்லாம் உன்னால வந்தது என்றான் ஜான். 

ஏய், நீ பொய் சொன்ன நீ அவனை ஏமாத்தறியேன்னு சொல்லிட்டன். நீ நல்ல நண்பனாயிருந்தா அவன்கிட்ட ஆரம்பத்தலயே சொல்லியிருக்கனும். இதே இவ என்கிட்ட நீங்க காதலிக்கறத சொன்னாயில்ல. அந்த மாதிரி நீ சொல்லியிருக்கனும் சொல்லாம விட்டது உன் தப்பு. உங்க மேட்டர் எனக்கு தெரிஞ்சி நான் சொல்லாம இருந்ததை கண்டு புடிச்சியிருந்தா என் நிலைமை அவ்ளோ தான் அதனால தான் சொல்லிட்டன்.

இது எத்தனை நாளைக்கு நிலைக்குதுன்னு நான் பாக்கறன்.

பெரிய வெங்காயம் மாதிரி பேசாத மூடிக்கிட்டு போ என பின்னால் இருந்து கோபமாக ராஜா பேச ஜான் தலையை குனிந்துக்கொண்டான். 

ஜீவா மரத்திலேறி இளநீர் காய்களை தள்ளி ஆளுக்கு இரண்டு என வெட்டி தந்தும் குடிக்க தொடங்கியபோது மச்சான் என அழைத்த அகிலன்னை பார்த்தேன். 

என்னடா என கேட்டும் மவுனமாக இருந்ததை பார்த்துவிட்டு ஜான் பக்கம் திரும்பி முறைத்துவிட்டு நான் அவன்கூட பேச விரும்பல. அவன் பண்ணத மனசு ஏத்துக்கமாட்டேன்குது. அவனைப்பாத்தா எனக்கு கோபம் வரும். அதனால நான் காலேஜ் வரல இதான் என் முடிவு எனச்சொல்லிவிட்டு நடக்க தொடங்கினேன். மற்றவர்களும் பின்னாடியே வந்தனர். 

இதுக்கு போய் நீ காலேஜ் வரமாட்டேன்னு சொல்றது நியாயமேயில்லடா என்றான் ரமேஷ். 

அதை காதில் வாங்கியபடியே நின்றேன். என்ன சொல்லப்போகிறேன் என என்னையே பார்த்தார்கள். 

தேவி பக்கம் திரும்பி நீ மஞ்சுவ பாக்கறயா என்றதும் புன்னகையுடன் சரியென்றால். ஜீவாவை அழைத்து நீ இவுங்கள மஞ்சு வீட்டுக்கு அழைச்சிம் போய்ட்டு அப்பறம் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வா என்றேன். 

யாரு அது என தேவியிடம் ப்ரியா கேட்க தேவி என்னைப்பார்த்தாள். 

எங்களோட பன்னிரெண்டாவது வரை படிச்சாங்க. அதுக்கப்பறம் படிக்கல. தேவிக்கு ரொம்ப நெருக்கம். இதே ஊர் தான். என் ப்ரண்ட் ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்ப ஒரு குழந்தையிருக்கு. அவுங்கள பாத்தன். தேவிய நலம் விசாரிச்சாங்க. அதான் போய் பாத்துட்டு வரச்சொல்றன்.

அப்ப நானும் போய்ட்டு வர்றன். 

நீ எதுக்கு?

சும்மா தான் என்றவளை ஆழமாக பார்தேன். 

சரி. எல்லாரையும் கூப்டும் போடா. நான் வீட்டுக்கு போறன். சாப்பாடு ரெடியாகியிருக்கும் சீக்கிரம் வந்துடுங்க எனச்சொல்லிவிட்டு நடந்தேன். 

மஞ்சு வீட்டுக்குள் நுழைந்த தேவி, ஜானை கண்டதும் ஆச்சர்யமாகி வாங்க வாங்க என எல்லோரையும் அழைத்த மஞ்சு தேவியை கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

தரையில் கம்பளியை விரித்து எல்லோரையும் உட்கார சொன்ன மஞ்சுவுக்கு மற்றவர்களை அறிமுகப்படுத்தினாள் தேவி. 

உனக்கு குழந்தையிருக்குன்னு சொன்னாங்க எங்க என ஆர்வமாக தேவி கேட்க குழந்தையை கொண்டு வந்து தந்த மஞ்சு எல்லோருக்கும் தண்ணி கொண்டு வந்து தந்தாள். 

தேவியும், ப்ரியாவும் குழந்தையை கொஞ்ச தொடங்கினார்கள். தேவி மஞ்சுவை பார்த்து என்னடீ எப்படியிருக்கற. ஆள் அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்ட. கல்யாணம்மான எங்களை மறக்கச்சொல்லுதா என கோவித்துக்கொள்ள.

இங்க வேலை சரியா இருக்கு. அதான் பேச முடியல. 

எங்க உன் வீட்டுக்காரர். 

இப்ப வந்துடுவாரு என மஞ்சு பதில் சொல்லும்போதே மாட்டை ஓட்டிவந்த முத்து தோட்டத்தில் கட்டிவிட்டு கை-கால்களை கழுவிக்கொண்டு வீட்டுக்குள் வந்தவன் வாங்க என புன்னகையுடன் அழைத்தவனிடம் இவுங்கயெல்லாம் ராஜா கூட காலேஜ் படிக்கறவங்க. அவன் வீட்டுக்கு வந்துயிருக்காங்க. ஜானும், தேவியும் மஞ்சுவோட படிச்சவங்களாம் அதான் பாத்துட்டு போக வந்துயிருக்காங்க என்றான் ஜீவா. 

அப்படியா சந்தோஷம்ங்க. உள்ளுர்காரன் அவன்தான் கல்யாணத்துக்கு வரல. நீங்க ஞாபகம் வச்சிக்கிட்டு வந்து பாக்கறிங்களே சந்தோஷமாயிருக்கு. நீங்கயெல்லாம் சாப்டுட்டு தான் போகனும். 

அய்யோ இல்ல பதறி மறுத்த தேவி. அவுங்க வீட்ல சாப்பாடு ரெடி செய்துயிருப்பாங்க. சாப்பாடாம போனா பிரச்சனை இன்னும் பெருசாகிடும் என்றாள். 

என்ன பிரச்சனை என தெரியாததால் முத்துவும் மஞ்சுவும் குழம்பியதை கண்டு ஜீவா தான் நடந்ததை சொன்னதும் 

லூசாடா அவன். எதுக்காக இப்ப முரண்டு புடிக்கறான். அவுங்கப்பன் என் பையன் காலேஜ் படிக்கறான்னு பெருமையா சொல்லிக்கிட்டு கிடக்கறாரு. நம்ம கூட இருக்கறவன் பெருசா படிக்கறான்னு சந்தோஷப்பட்டா அதல மண்ணள்ளி போடறானேடா. இந்த பிரச்சனைக்கெல்லாம் போய் எவனாவது காலேஜ் போகமாட்டன்னு சொல்லுவானாடா?. கேனப்பையன் என திட்டினான் முத்து. 

சும்மா திட்டாதிங்க. இவன் பண்ணது மட்டும் சரியா?  என கோபமாக ப்ரியா கேட்க முத்து அதிர்ந்து போக அவன் காலேஜ் வருவான் நான் பாத்துக்கறன் என்றவள் நாங்க கிளம்பறோம் என சடாரென எழுந்தாள். 

அவனை திட்டனா இவளுக்கு ஏன் தான் இப்படி கோபம் வருதுன்னு தெரியல என மனதுக்குள் எண்ணியபடி ஏய் உட்காருடீ என ப்ரியாவை இழுத்து உட்கார வைத்த தேவி. பிரச்சனைய முடிச்சி வைக்க வழி சொல்லுடீன்னா நீயும் கோபப்படற?. 

நீங்க மட்டும் திட்டளாமா?. 

ஏம்ம இனிமே யாரும் அவனை திட்டல போதும்மா என மஞ்சு கெஞ்ச முகத்தை அப்போதும் உர்ரென வைத்துக்கொண்டிருந்தவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் மஞ்சு.

அப்போது வீட்டுக்குள் ஓடி வந்த ஒருப்பெண் ராஜாண்ணன் அம்மா உங்களை வரச்சொன்னாங்க எனச்சொல்லிவிட்டு ஓடினாள். 

சரிங்க நாங்க கிளம்பறோம் என அனைவரும் எழ அடுத்த முறை வரும்போது அவசியம் எங்க வீட்ல சாப்பிடற மாதிரி வரனும் என்றான் முத்து. 

வெளியே வரும்போது தேவியிடம் கலகலப்பாக பேசிக்கொண்டு வந்த மஞ்சுவிடம் அடிக்கடி போன் பண்ணுடீ என போன் நம்பரை தந்தாள். வாங்கியபடியே ப்ரியாவிடம் பெஸ்ட் ஆப் லக் என கைதந்தவள் புன்னகையோடு வழி அனுப்பிவைத்தாள். 

வீட்டுக்கு வந்தவர்களுக்கு சாப்பாடு பறிமாறப்பட ப்ரியா உதவி செய்ததோடு கடைசியாக சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தபின் முடிவச்சொல்லுடா என ரமேஷ் தான் ஆரம்பித்தான். 

நான் வர்றன் ஆனா அவன்கிட்ட பேசமாட்டன். அவனும் என்கிட்ட பேசக்கூடாது. அவனுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் கிடையாது இதுக்கு சம்மதம்னா வர்றன் இல்லன்னா வரமாட்டன். 

எல்லோரும் அதிர்ச்சியாகி என்னடா இப்படி சொல்ற. 

அவன் மேல வச்சியிருந்த நம்பிக்கை போய்டுச்சி அதனால இந்த முடிவு. 

ஜான் கண் கலங்கியபடியே அவன் சொல்றத நான் ஒத்துக்கறன் எனச்சொல்லிவிட்டு எழுந்தான். மற்றவர்கள் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் முழித்தனர். 

நீ பண்றது ரொம்ப ஓவர்ன்னு நினைக்கறன் என்றான் அகிலன். 

உங்க எல்லாரையும் விட அதிகமான நம்பிக்கை அவன் மேல வச்சியிருந்தன். அது பொய்யாகிடுச்சி. உனக்கு ரொம்ப நம்பகமான நண்பர்கள் அந்த மாதிரி பண்ணா அப்பத்தெரியும்டா அந்த வலி. என் வலிய உங்களாள உணர முடியாது. 

நான் பேசுவதை கேட்டு அமைதியாக இருக்க நான் நாளைக்கு காலேஜ்க்கு நிச்சயமா வர்றன் இப்ப கிளம்புங்க. இருட்டிட போகுது என்றேன். கிளம்பினார்கள். ஜான் தான் கண்ணீல் நீரோடு போனான். 

இந்த மூன்று மாதத்தில் வகுப்பில், காலேஜ் புங்கமரம், நண்பர்கள் இருக்கும் இடத்தில் அவன் என்னிடம் பேச முயற்சி செய்யும் போதுயெல்லாம் தவிர்த்துக்கொண்டே வந்தேன். காலேஜ் முழுவதும்மே இவனுங்களா பேசிக்கமாட்டேன்கிறானுங்க என ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். தேவி மட்டும் பேசுவாள். ப்ரியா கூட ஒருமுறை நீ அவனை ரொம்ப தண்டிக்கறன்னு நினைக்கறன் என பரிந்து பேச இதல நீ தலையிடாத என சடரென சொல்ல அவள் கூட இரண்டு நாள் பேசாமள் இருந்தாள். 

இப்பயெல்லாம் சரியாவே பேசறதில்ல, எப்ப பாத்தாலும் உம்முன்னு இருக்கான். படத்துக்கு கூப்டும் போலான்னாலும் வர்ற மாட்டேன்கிறான் நீ அவன்கிட்ட பேசிடேன் என தேவியும் பாவமாக தூது வர ஆரம்பித்தாள். ஆனால் மனம்மோ வேண்டாம் என்றது. 

புங்கமரத்தடியில் உட்கார்ந்து ப்ரியாவிடம் பேசும்போது தான் ஏய் சொல்ல மறந்துட்டன் இன்னைக்கு அவளை பாத்தன் தெரியுமா?. என்னமா சைக்கிள் ஓட்டறா, எப்ப பாத்தாலும் அந்த ஒத்த சடையே போடறா, முடி குட்டையா இருந்தாலும் அவளுக்கு எவ்ளோ அழகு தெரியுமா? 

யாரு ?. 

அதாம்ப்பா அந்த ஒயிட் சுடிதார். 

ப்ரியா முறைத்தபடியே அவ பேர் தெரியாது, ஊர் தெரியாது, பேசனது கிடையாது எப்ப பாத்தாலும் அவளைப்பத்தியே பேசிக்கிட்டு இருக்கியே வெட்கமாயில்ல. 

இதலயென்ன வெட்கம். இன்னோன்னு தெரியுமா அவ பேர் வேண்ணா தெரியாம இருக்கலாம், பேசாமயிருக்கலாம். ஆனா எங்களுக்குள்ள ஏதோ ஒன்னு ஓடுது அதனால தான் அவ அடிக்கடி என் கண்ணுல படறா. 

அப்படியா பிச்சைக்காரியக்கூட தான் தினமும் பாக்கற அப்ப உங்களுக்குள்ள ஏதாவது ஓடுதா?. 

ஏன்னடா உன்னைப்போய் பிச்சைக்காரி அதுயிதுன்னு என்றதும் நான் உனக்கு பிச்சைக்காரி மாதிரி தெரியறனா என ஒங்கி தோல் பட்டையில் சிணுங்கியபடியே குத்த மச்சான் என அழைத்தபடி ஓடிவந்தான் அகிலன். 

என்ன இப்ப தலைபோற அவசரம் எதுக்கு கத்திக்கிட்டு ஓடி வர்ற என கேட்டதும் 

ஜான், ஜான் என மூச்சுவாங்கினான்.

தொடரும்……………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக